பாஜக அரசு தொலைநோக்குடன் கூடிய பல்வேறு நலத் திட்டங்களை நிறைவேற்றியுள்ளது என்றார் சரத்குமார்.
சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தென்காசி தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர் மருத்துவர் கிருஷ்ணசாமிக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டார்.
தென்காசி புதிய பேருந்து நிலையம் பகுதியில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் அவர் பேசியது: அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மக்களிடையே அமோக வரவேற்பு உள்ளது. பாஜக ஆட்சி சிறந்த ஆட்சியாகும். தொலைநோக்குடன் கூடிய பல்வேறு நலத் திட்டங்களை நிறைவேற்றியுள்ளது. இந்தியர்களின் பெருமையையும், இந்தியாவின் பெருமையையும் உலகறியச் செய்தவர் பிரதமர் மோடி.
ஆனால், காங்கிரஸ் ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழலே நடைபெற்றது. மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் ஆக வேண்டும் என்ற ஒரு ஆசையை தவிர வேறு எதுவும் இல்லை. ஊழலற்ற ஆட்சி, வலிமையான ஆட்சி மத்தியில் இருந்தால்தான் மாநிலத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்களுக்கு தேவையான நிதியை பெற முடியும்.
கேரளத்தில் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து கம்யூனிஸ்ட் கட்சியினர் போட்டியிடுகின்றனர். ஆனால் இங்கு இணைந்து தேர்தலை எதிர்கொண்டு வருகின்றனர். இங்கு நண்பர், அங்கு எதிரி. இதுதான் சந்தர்ப்பவாத கூட்டணி என்றார் அவர்.
முன்னதாக, தென்காசி எம்.எல்.ஏ. செல்வமோகன்தாஸ்பாண்டியன், சமக மாநில பொதுச் செயலர் விவேகானந்தன் ஆகியோர் பேசினர். கூட்டத்தில், சமக தென்மண்டலச் செயலர் சுந்தர், மாவட்டச் செயலர் தங்கராஜ், மாவட்ட இளைஞரணிச் செயலர் துரை, அருணா,வில்சன், ஒன்றிய அதிமுக செயலர் சங்கரபாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
சிவந்திபுரத்தில்... மேலும், சிவந்திபுரத்தில் மனோஜ்பாண்டியனை ஆதரித்து சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.