ஆடித் தவசு விழாவை முன்னிட்டு, பாளையங்கோட்டை திரிபுராந்தீஸ்வரர் கோயிலில் 5008 மாவிளக்குகளால் பக்தர்கள் பூஜை செய்து அம்பாளை வழிபட்டனர்.
பாளையங்கோட்டை கோமதி அம்பாள் சமேத திரிபுராந்தீஸ்வரர் கோயிலில் ஆடித் தவசு திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதையொட்டி காலையில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றன.
மாவிளக்கு தயார் செய்வதற்காக பச்சரிசி மாவு, வெல்லம், நெய் போன்றவற்றை பக்தர்கள் வழங்கினர். அதைக் கொண்டு அம்பாளுக்கு 5008 மாவிளக்குகள் தயார் செய்யப்பட்டன. மாலையில் அம்பாள் தவசுக் காட்சியில் எழுந்தருளினார். பக்தர்களுக்கு மாவிளக்கில் தீபம் ஏற்றி கொடுக்கப்பட்டது. தீபம் ஏற்றப்பட்ட மாவிளக்கை கொண்டு பக்தர்கள் தீபாராதனை காட்டி அம்பாளை வழிபட்டனர்.
தொடர்ந்து, கோமதி அம்பாள் மலர்பாவாடை அலங்காரத்திலும், சுவாமி சிறப்பு அலங்காரத்திலும் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் மற்றும் திருச்சிற்றம்பல வழிபாட்டு அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.