திருநெல்வேலி மாவட்ட யாதவர் பண்பாட்டுக் கழக 53ஆவது பொதுக்கூட்டம் பாளை. அருகே உள்ள கேடிசி நகரில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு கழகத் தலைவர் சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். தென்மண்டலத் தலைவர் ராமகிருஷ்ணன், காங்கிரஸ் மாநில பொதுச் செயலர் வானமாமலை, தொழிலதிபர் மகாலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். யாதவர் பண்பாட்டுக் கழகச் செயலர் குத்தாலிங்கம் வரவேற்றார். சங்க வரவு செலவுகளை பொருளாளர் பாபநாசம் வாசித்தார். விழாவில் 2018-2019ஆம் கல்வி ஆண்டில் 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து மாணவர்- மாணவிகளுக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் அண்ணா பல்கலைக்கழக இயந்திரவியல் துறைத் தலைவர் ராஜகுமார், சங்கர் பாலிடெக்னிக் பேராசிரியர் வெள்ளத்துரை, அண்ணா பல்கலைக்கழக நூலகர் முருகன், கன்னியாகுமரி சட்ட ஆலோசகர் சிவக்குமார் நாகப்பன் ஆகியோர் பேசினர். உதவித் தலைவர் சுப்பையா நன்றி கூறினார்.