திருநெல்வேலி மாவட்டத்தில் ஆசிரியர்களுடன் இணைந்து மாணவர்களின் கல்வி, தனித் திறன்களை வெளிக்கொணர முயற்சிகள் எடுக்கப்படும் என்றார், புதிதாகப் பொறுப்பேற்ற மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆர். பூபதி.
திருநெல்வேலி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக இருந்த கணேசன் ஓய்வுபெற்றதைத் தொடர்ந்து, புதன்கிழமை காலை அந்த பொறுப்பை ஏற்றுக் கொண்ட ஆர். பூபதி செய்தியாளர்களிடம் கூறியது: பாரம்பரியம் மிகுந்த இம்மாவட்டத்தின் முதன்மைக் கல்வி அலுவலராகப் பொறுப்பேற்றது மகிழ்ச்சியளிக்கிறது. பள்ளிக் கல்வியில் தனியொரு இடம் பெற்ற இம்மாவட்டம் பொதுத்தேர்வுகளில் சிறந்த தேர்ச்சியைப் பெற்று வருகிறது. அதேநிலை தொடர தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். மாணவர்களின் கல்வி, ஆளுமைத் திறன், தனித் திறமைகளை வெளிக்கொணர ஆசிரியர்களுடன் இணைந்து தேவையான முயற்சிகள் எடுக்கப்படும். அர்ப்பணிப்பு உணர்வுடன் ஆசிரியர்கள் பணியாற்ற அறிவுறுத்தப்படுவர். பெற்றோரும் தகுந்த ஒத்துழைப்பளிக்க வேண்டும் என்றார் அவர்.