சங்கரன்கோவில் அருகே கட்செவி அஞ்சல் மூலம் பட்டா கோரிய மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு ஆட்சியரின் உத்தரவின்பேரில் வருவாய்த்துறை அலுவலர்கள் வீடுதேடி வந்து பட்டா வழங்கினர்.
சங்கரன்கோவில் அருகேயுள்ள கரிவலம்வந்தநல்லூரைச் சேர்ந்த பெருமாள் மகள் கோமு (30). மாற்றுத் திறனாளி. கடந்த 4 தலைமுறைகளாக இவரது குடும்பத்தினர் அதே ஊர், ஊருணி பகுதியில் வசித்து வந்தனர்.
இந்நிலையில், கோமு தனக்கு பட்டா வழங்கக் கோரி, ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷுக்கு கட்செவி அஞ்சல் மூலம் சில தினங்களுக்கு முன் கோரிக்கை விடுத்தார். அதை பரிசீலித்த ஆட்சியர், கோமுவுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்குமாறு சங்கரன்கோவில் வட்டாட்சியருக்கு உத்தரவிட்டார். அதையடுத்து, ஊருணி பகுதியில் பட்டா வழங்க முடியாது என்பதால், கரிவலம்வந்தநல்லூரிலிருந்து செவல்பட்டி செல்லும் சாலையில் இரண்டேகால் சென்ட் நிலத்துக்கான பட்டாவை சங்கரன்கோவில் வட்டாட்சியர் ஆதிநாராயணன், கோமுவின் வீட்டுக்கு வந்து நேரில் வழங்கினார். மேலும், கோமுவுக்கு அரசு சார்பில் வீடுகட்டிக் கொடுக்கவும் ஊரக வளர்ச்சித் துறைக்கு ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இதுதவிர, கரிவலம்வந்தநல்லூர் பகுதியில் வசித்துவரும் 135 பேருக்கு உடனடியாக பட்டா வழங்கவும் ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.