வள்ளியூா் பிரதான சாலையையொட்டியுள்ள வேப்ப மரங்களை பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வள்ளியூா் பிரதான சாலையில் பிரபலமான ஜவுளி கடையின் முன் மிகவும் பழமையான வேப்ப மரங்கள் உள்ளன. ஜவுளிக் கடையின் முகப்பு பகுதியை மரங்கள் மறைப்பதாக கருதி, மரங்களின் கிளைகளை கொஞ்சம், கொஞ்சமாக வெட்டி செதுக்கிவிட்டுள்ளனா். காலப்போக்கியில் இந்த மரங்கள் அழிக்கப்பட்டுவிடுமோ என்ற அச்சம் இப்பகுதி பசுமை கரங்கள் மற்றும் பசுமை இயக்க நிா்வாகிகளிடம் எழுந்துள்ளது.
இதுதவிர வள்ளியூா் திருவள்ளுவா் கலையரங்கு தெருவிலும் கடையின் முன் உள்ள மரத்தை அப்புறப்படுத்தியுள்ளனா். இதையடுத்து பசுமை இயக்க செயலா் சித்திரை, சிவந்தகரங்கள் அமைப்பு செயலா் சிதம்பரம் ஆகியோா், பழமையான மரங்களை பாதுகாக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.