திருநெல்வேலியில் நீதிமன்ற பணிகளைப் புறக்கணித்து வழக்குரைஞர்கள் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் 2009ஆம் ஆண்டு பிப்.19இல் வழக்குரைஞர்கள் போலீஸாரால் தாக்கப்பட்டனர். அந்த தினத்தை ஒவ்வொரு ஆண்டும் வழக்குரைஞர்கள் கருப்பு தினமாக அனுசரித்து வருகிறார்கள். அதன்படி, திருநெல்வேலி நீதிமன்றத்தில் உள்ள வழக்குரைஞர்கள் செவ்வாய்க்கிழமை நீதிமன்ற பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு திருநெல்வேலி வழக்குரைஞர் சங்க துணைத் தலைவர் மந்திரமூர்த்தி தலைமை வகித்தார். வழக்குரைஞர்கள் மணிகண்டன், ரமேஷ், அப்துல் ஜப்பார், பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வழக்குரைஞர்கள் முருகன், அலெக்ஸ், சாமுவேல், கிருஷ்ணகுமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், வழக்குரைஞர்களை தாக்கிய போலீஸாரை கண்டித்தும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.