திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உருவ பொம்மையை எரிக்க முயன்றதாக தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாணவரணியினர் 10 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
தமிழக அரசு அண்மையில் நடத்திய அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க, தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவனர்- தலைவர் ஜான் பாண்டியனுக்கு அழைப்பு விடுத்தது தொடர்பாக சட்டப் பேரவையில் மு.க.ஸ்டாலின் கூறிய கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, வண்ணார்பேட்டையில் அவரது உருவ பொம்மையை தமமுகவினர் எரிக்கப் போவதாக தகவல் பரவியது. இதையடுத்து, செல்லப்பாண்டியன் சிலை அருகில் காவல் உதவி ஆணையர் கோடிலிங்கம் தலைமையில் போலீஸார் குவிக்கப்பட்டனர். இந்நிலையில், மு.க.ஸ்டாலினின் உருவ பொம்மையை எரிக்கும் நோக்கில் அப்பகுதிக்கு திரண்டுவந்த, தமமுக மாநகர் மாவட்டத் தலைவர் கண்மணி மாவீரன், மாணவர் அணியினர் உள்ளிட்ட 10 பேரை போலீஸார் கைது செய்தனர்.