கிராமக் கோயில் பூஜாரிகள் சங்கம் சார்பில், பாளையங்கோட்டையில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழக அரசின் சமூக நலத்திட்ட உதவிகளைப் பெறுவதற்கு பிற வாரியங்களின் உறுப்பினர்களுக்கு ஆண்டு வருமானம் ரூ. 72 ஆயிரமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், கிராமக் கோயில் பூஜாரிகள் நலஉதவிகளை பெறுவதற்கு ஆண்டு வருமானம் ரூ. 24 ஆயிரமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான சான்றுகளை அளிக்க வருவாய்த் துறையினர் முன்வருவதில்லை. ஆகவே, கிராமக் கோயில் பூஜாரிகளும் நலஉதவிகளைப் பெறுவதற்கான ஆண்டு வருமான உச்சவரம்பை ரூ. 72 ஆயிரமாக உயர்த்த வேண்டும். அனைத்து பூஜாரிகளுக்கும் மாத ஊக்கத்தொகையாக ரூ. 5 ஆயிரம் வழங்க வேண்டும். தமிழகத்தில் உள்ள கோயில்களில் அறங்காவலர்களை நியமிக்கும்போது அக்கோயிலின் பூஜாரி ஒருவரையும் சேர்க்க வேண்டும்.
பூஜாரிகள் நலவாரியம் செயல்பாட்டில் இருந்தும், பல மாவட்டங்களில் இதுவரை நலவாரிய அடையாள அட்டைகள் முழுமையாக வழங்கப்படாமல் உள்ளது. அடையாள அட்டை பெற்றவர்களுக்கு புதுப்பித்தும் வழங்கப்படவில்லை. ஆகவே, புதிய அட்டைகள் பெறாதவர்களுக்கு அதை வழங்கவும், ஏற்கெனவே அட்டை பெற்றவர்களுக்கு புதுப்பித்து வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட அமைப்பாளர் டி.ஏ. ஞானகுட்டி சுவாமிகள் தலைமை வகித்தார். நிர்வாகிகள் ரங்கநாதன், கண்ணன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். ஏ. கிருஷ்ணன் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். நிர்வாகிகள் கே. இசக்கியப்பன், மகாலிங்கம், முத்துக்குமார் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.