திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில், ரூ.60.76 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளையும், கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையையும் ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் வழங்கினார்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில், கடல் கடந்த இந்தியர் இழப்பீட்டுத் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், மரணமடைந்த கடையநல்லூர் வட்டம், குமந்தாபுரம் ரமேஷ் திருமலைக்குமாரின் மனைவி ராமலெட்சுமிக்கு ரூ.53,39,827-க்கான காசோலையை ஆட்சியர் வழங்கினார். பாளையங்கோட்டை வட்டம், முத்தூர் கிராமத்தைச் சேர்ந்த 10 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினார். பி.மாரியம்மாள் என்பவருக்கு வாரிசு அடிப்படையில் ஊர்நல அலுவலர் நிலைக்கான பணியிட ஆணை உள்பட மொத்தம் ரூ.60.76 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் பூ.முத்துராமலிங்கம், திருநெல்வேலி சார் ஆட்சியர் மணீஷ் நாராணவரே உள்பட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.