கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்ட இரு மாணவிகளை பள்ளிகளிலிருந்து நீக்கியதாக, தனியார் மெட்ரிக் பள்ளிகள் மீது ஆட்சியரிடம் திங்கள்கிழமை புகார் அளிக்கப்பட்டது.
தனியார் பள்ளிகளால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் மாணவிகளின் குடும்பத்தினர் மற்றும் திராவிடத் தமிழர் கட்சியினர், திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தின்போது, ஆட்சியரிடம் அளித்த மனு:
கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் சேர்க்கப்பட்ட 2 மாணவிகளை காரணம் எதுவுமின்றி நீக்கியுள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட தனியார் மெட்ரிக் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே பள்ளியில் மாணவிகள் படிப்பைத் தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர். முன்னதாக, அவர்கள் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.