திருநெல்வேலியில் சனிக்கிழமை 101.3 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவானது.
திருநெல்வேலியில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக வெயில் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் சனிக்கிழமை 101.3 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவானது. இதனால் மதிய வேளைகளில் மாநகரத்தில் உள்ள பெரும்பாலான சாலைகள் கூட்டமின்றி காணப்பட்டன. சாலைகளில் ஆங்காங்கே கானல் நீர் தென்பட்டது. கடுமையான வெயில் காரணமாக தேர்தல் பிரசாரமும் களைகட்டவில்லை. மாலை வேளையிலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், பல்வேறு இடங்களில் தேர்தல் பிரசாரம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. கடும் வெயில் காரணமாக மாநகரம் முழுவதும் பழச்சாறு, இளநீர், தர்ப்பூசணி, நுங்கு விற்பனை களைகட்டியது. அடுத்த சில தினங்களில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.