வடுகபட்டியிலிருந்து இனாம்கோவில்பட்டிக்குச் செல்லும் சாலையில் உள்ள பழைய சிறுபாலங்களை அகற்றிவிட்டு, மேம்பாலங்கள் கட்டவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வடுகபட்டி- இனாம்கோவில்பட்டி இடையே 2 இடங்களில் சிறு பாலங்கள் உள்ளன. அவை தலா 5 சிறிய சிமென்ட் குழாய்களை இணைத்து நீர்வரத்துக்காகக் கட்டப்பட்ட சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாகிறது.
சிமெண்ட் குழாய்களின் சுற்றளவு மிகவும் குறுகியதாக இருப்பதால், மழைக்காலங்களில் தென்மலை கண்மாய் கால்வாயிலிருந்து தண்ணீர் திறந்துவிடும்போது குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு, சாலை வழியாகத் தண்ணீர் பாய்ந்தோடுவது வழக்கமாகிவிட்டது.
அதனால், வாகனப் போக்குவரத்து முழுவதுமாகத் துண்டிக்கப்பட்டு, வீடுகளுக்குள் மக்கள் முடங்கும் அபாயம் உள்ளது. குறிப்பாக, அவசரகாலத்தில் மருத்துவமனைக்குக்கூட செல்லமுடியாத சூழல் காணப்படுகிறது. பள்ளி செல்லும் மாணவ, மாணவியரும் வெகுவாகப் பாதிக்கப்படுகின்றனர். ஏற்கெனவே, இப்பாலத்தை இடித்துவிட்டு தண்ணீர் பெருகாத அளவுக்கு கான்க்ரீட் தூண்களுடன்கூடிய மேம்பாலங்கள் அமைக்கவேண்டும் என, முன்னாள் எம்.பி. பொ. லிங்கம், முன்னாள் எம்எல்ஏ எஸ். துரையப்பா ஆகியோரிடம் இனாம்கோவில்பட்டி கிராம மக்கள் கோரிக்கை மனு அளித்தும் எவ்வித பலனும் இல்லையாம். எனவே, வடுகபட்டி-இனாம்கோவில்பட்டி செல்லும் சாலையில் உள்ள 2 சிறிய தரைவழிப் பாலங்களை இடித்துவிட்டு, நவீனரக மேம்பாலங்களை அமைக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.