சுசீந்திரம் அருகே ரப்பர் நிறுவனத்தில் ரூ.1.50 லட்சத்தை திருடிய மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டம், சிதம்பராபுரத்தைச் சேர்ந்தவர் முருகேசன் (48). இவர், கன்னியாகுமரி மாவட்டம், தாமரைகுட்டிவிளை பகுதியில் சொந்தமாக ரப்பர் நிறுவனம் நடத்தி வருகிறார். வழக்கம்போல், சனிக்கிழமை பணிகளை முடித்துவிட்டு நிறுவனத்தை பூட்டி விட்டு சென்ற அவர், ஞாயிற்றுக்கிழமை காலையில் திறக்க வந்த போது, அங்கு கதவுகள் உடைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. உள்ளே சென்று பார்த்த போது, ஆங்காங்கே பொருள்கள் சிதறிக் கிடந்தன. மேஜையின் உள்ளே வைத்திருந்த ரூ.1.50 லட்சம் ரொக்கம் திருடு போயிருந்தது தெரிய வந்தது.
இச்சம்பவம் குறித்து சுசீந்திரம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.