திருநெல்வேலி குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வைகாசி விசாகத் திருவிழாவையொட்டி, கோயில் அருகிலுள்ள மதுக்கடைகளுக்கு சனிக்கிழமை (மே 18) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சனிக்கிழமை (மே 18) வைகாசி விசாக திருவிழா நடைபெறுகிறது. எனவே, கோயில் அருகில் இயங்கி வரும் அரசு மதுபானக் கடை மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடத்திற்கு அன்றைய தினம் விடுமுறை அளிக்கப்படுகிறது.
மதுபான விற்பனை, மதுபானத்தை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கடத்துதல், மதுபானத்தை பதுக்கி வைத்தல் போன்ற செயல்கள் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது தமிழ்நாடு மதுவிலக்கு அமலாக்கச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் எச்சரித்துள்ளார்.