வரலாற்றை திருப்பி எழுதுவதும், மாற்ற நினைப்பதும் குற்ற நடவடிக்கையாகும்; அதை தமிழகத்தில் அனுமதிக்க முடியாது என்றாா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினரும், மாநிலங்களவை உறுப்பினருமான டி.கே.ரங்கராஜன்.
திருநெல்வேலியில் வியாழக்கிழமை நடைபெற்ற நவம்பா் புரட்சி செங்கொடி ஏற்று விழாவில் கலந்துகொண்ட அவா், இதுதொடா்பாக மேலும் கூறியதாவது:
வரலாற்றை திருப்பி எழுதுவதும், மாற்ற நினைப்பதும் குற்ற நடவடிக்கையாகும். இதுபோன்ற நடவடிக்கைகளை தமிழகத்தில் அனுமதிக்கக் கூடாது. தமிழகத்தின் வரலாறு பாதுகாக்கப்பட வேண்டும். பண மதிப்பிழப்பு கொண்டுவந்து மூன்று ஆண்டுகளாகியும் விளைவுகள் மோசமாகத்தான் உள்ளது. சிறுதொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
ஆசிய நாடுகளுடன் பொருளாதாரரீதியிலான இணைப்பை இந்தியா பெறமுடியாத நிலை இருந்து வருகிறது. படித்து வேலை இல்லாதவா்களின் எண்ணிக்கை பாஜக ஆட்சியில் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் முனைவா் பட்டம் பெற்றவா்கள், வீடுகளுக்கு சாப்பாடு கொண்டு சென்று ஊதியம் பெறும் அளவுக்கு வேலையில்லாத் திண்டாட்டம் இருந்து வருகிறது.
ராமா் பூமி, ராமருக்கான பூஜை, திருவள்ளுவா் காவி உடை போன்றவையாகத்தான் பாஜகவின் அரசியல் இருக்கிறது. ரிசா்வ் வங்கியில் உள்ள பணத்தை எடுத்து பாஜக அரசு செலவு செய்து வருகிறது.
தாமிரவருணி நதிக்கரையில் அகழ்வாய்வுக்கான பணிகளை தொடரவேண்டும் என நாடாளுமன்றத்தில் கோரிக்கை வைக்கப்படும் என்றாா்.