திருநெல்வேலி மாவட்டத்தில் செப். 14ஆம் தேதி "லோக் அதாலத்' எனப்படும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறும். இதில், 5136 வழக்குகளில் விசாரணைக்கு ஏற்கப்படும் என மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுத் தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான ஏ.நசீர் அகமது தெரிவித்தார்.
திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் அவர் திங்கள்கிழமை கூறியது:
தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவின்படி, மாவட்ட சட்டப்பணிகள் குழு சார்பில், இம்மாதம் 14ஆம் தேதி திருநெல்வேலி மற்றும் வட்ட நீதிமன்றங்களில் தேசிய மக்கள் நீதி மன்றம் நடைபெறும்.
இதில், நிலுவையில் உள்ள அசல் வழக்குகள், தொழிலாளர் வழக்குகள், குடும்ப வழக்குகள், நில ஆர்ஜித வழக்குகள் உள்ளிட்டவை விசாரிக்கப்பட்டு சுமுக தீர்வு காணப்படும்.
மேலும், போக்குவரத்து சேவை, அஞ்சல் அல்லது தொலைபேசி சேவை, மின்சாரம், நீர் விநியோகம், மருத்துவச் சேவை, காப்பீட்டுத்திட்டங்கள் போன்றவற்றின் குறைபாடு குறித்தும் தீர்வு காணலாம்.
திருநெல்வேலியில் 9, வட்ட நீதிமன்றங்களில் 16 என மொத்தம் 25 அமர்வுகளில் விசாரணை நடைபெறும். 3, 174 நிலுவைவழக்குகள், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத 1,962 வழக்குகள் என 5136 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றார்.
அப்போது, முதலாவது அமர்வு நீதிமன்ற நீதிபதி அருள்முருகன், மக்கள் நீதிமன்ற நீதிபதி சுபாதேவி, தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ரவிசங்கர், சட்ட உதவி மைய நீதிபதி வஷீத் குமார், தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ரவிசங்கர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.