ஆலங்குளம் அருகே கடையில் திருடிய இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
ஆலங்குளம் அருகேயுள்ள குருவன்கோட்டையைச் சேர்ந்தவர் சுடலைமாடன் (49). இவர், குறிப்பன்குளம் சாலையில் பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார். வெள்ளிக்கிழமை காலையில் கடையை திறந்து பார்த்தபோது, கடையில் இருந்து பொருள்கள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.
புகாரின்பேரில், ஆலங்குளம் போலீஸார் வழக்குப் பதிந்து அதே ஊரைச் சேர்ந்த ராம்கி என்ற ராமசாமியை (30) கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இளைஞரை போலீஸார் ஆலங்குளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.