ஆம்பூர் அருகே புதுக்குளம் மதகு சீரமைப்புக் குழியில் விழுந்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து ஆழ்வார்குறிச்சியில் உறவினர்கள், பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஆழ்வார்குறிச்சியில் ஒலிபெருக்கி நிலையம் நடத்தி வந்த ஐயப்பன் (53), வெள்ளிக்கிழமை இரவு கருத்தப்பிளையூர் சென்று திரும்பும் போது கருத்தப்பிள்ளையூர் - ஆம்பூர் சாலையில் உள்ள புதுக்குளத்தில் மதகு சீரமைப்பிற்காகத் தோண்டப்பட்ட குழியில் விழுந்து உயிரிழந்தார். இது குறித்து ஆழ்வார்குறிச்சி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஐயப்பன் உயிரிழந்ததற்கு மதகு சீரமைப்புப் பணியில் ஈடுபட்டுள்ள ஒப்பந்ததாரர்கள் உரிய அறிவிப்புப் பலகையோ, தடுப்புகளோ அமைக்காததுதான் காரணம்; எனவே ஒப்பந்ததாரர் மற்றும் பணிகள் முறையாக நடைபெறுவதை உறுதி செய்யாத பொதுப்பணித் துறை அதிகாரிகள் உள்ளிட்டோரையும் இந்த வழக்கில் சேர்க்க வேண்டும் என்று ஐயப்பனின் உறவினர்கள் வலியுறுத்தினர். இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை பகல் 12.30 மணியளவில் அம்பாசமுத்திரம் - தென்காசி சாலையில் உறவினர்கள், பொதுமக்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்த தகவலறிந்ததும், அம்பாசமுத்திரம் காவல் துணைக் கண்காணிப்பாளர் ஜாஹிர் ஹுசைன், வட்டாட்சியர் வெங்கடேஷ், கடையம் காவல் ஆய்வாளர் ஆதிலட்சுமி, காவல் உதவி ஆய்வாளர்கள் காஜா மைதீன், ஜெயராஜ், கிராம நிர்வாக அலுவலர்கள் குத்தாலிங்கம், கிருஷ்ணவேணி உள்ளிட்டோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு நடத்தினர். ஆனால், ஒப்பந்தக்காரர் பெயரை வழக்கில் சேர்க்கும் வரை ஐயப்பன் உடலை வாங்க மாட்டோம் என்று கூறி மறியலை தொடர்ந்தனர். இதையடுத்து தொடர்புடைய நபர்கள் மற்றும் அதிகாரிகள் மீது உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துணைக் கண்காணிப்பாளர் உறுதியளித்ததால் அனைவரும் கலைந்து சென்றனர். சாலை மறியலால் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அம்பாசமுத்திரம் - தென்காசி நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.