அசோக் நினைவு சமூக நீதி சுடர் திருநெல்வேலியிலிருந்து தஞ்சாவூருக்கு செவ்வாய்க்கிழமை எடுத்துச் செல்லப்பட்டது.
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் 3ஆவது மாநில மாநாடு தஞ்சாவூரில் வருகிற 15,16,17 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் தச்சநல்லூர் அருகேயுள்ள கரையிருப்பில் கொலை செய்யப்பட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கப் பொருளாளர் அசோக்கின் நினைவு சமூக நீதி சுடர் திருநெல்வேலியில் இருந்து தஞ்சாவூருக்கு செவ்வாய்க்கிழமை புறப்பட்டது.
தொடக்க நிகழ்ச்சி பாளையங்கோட்டை ரெட்டியார்பட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக் குழு அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலக் குழு உறுப்பினர் பூ.கோபாலன் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலர் கே.ஜி.பாஸ்கரன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் வீ.பழனி, காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க கோட்ட பொதுச் செயலர் செ.முத்துகுமாரசாமி ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலத் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஆர்.கிருஷ்ணன், அசோக்கின் நினைவு ஜோதியை எடுத்து தர, மாநில துணை பொதுச் செயலர் ஆர்.செல்லக்கண்ணு பெற்றுக் கொண்டார்.
இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் பி.ஜெயராஜ், ஸ்ரீராம், எம்.சுடலைராஜ், ராஜகுரு, துரை , மாவட்டக் குழு உறுப்பினர் பா.வரகுணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.