திருநெல்வேலியில் காங்கிரஸ் கட்சியினர் புதன்கிழமை திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருநெல்வேலி மாவட்டம், பாப்பான்குளம் பகுதியில் உள்ள முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சம்பந்தப்பட்டோரை கைது செய்யக் கோரியும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் காங்கிரஸார் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருநெல்வேலி மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் கொக்கிரகுளத்தில் உள்ள கட்சி அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவர் கே. சங்கரபாண்டியன் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச் செயலர் சொக்கலிங்ககுமார், மாவட்ட பொருளாளர் ராஜேஷ் முருகன், மண்டலத் தலைவர்கள் மாரியப்பன், ஐயப்பன், நிர்வாகிகள் குறிச்சி கிருஷ்ணன், வரகுண பாண்டியன், மாவட்ட துணைத் தலைவர் வெள்ளபாண்டியன், பகுதி பொறுப்பாளர்கள் ரசூல் மைதீன், நசீர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பின்னர் அவர்கள் திருநெல்வேலி-திருவனந்தபுரம் சாலையில் மறியல் செய்ய முடிவு செய்தனர். போலீஸார் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, மறியல் கைவிடப்பட்டது.