தொழில்துறையை வலுப்படுத்த வேண்டும்: மாணவர்களுக்கு ஆட்சியர் அறிவுரை
தமிழகத்தில் தொழில்துறையை வலுப்படுத்த மாணவர்கள் தொழில்முனைவோராக வரவேண்டும் என்றார் ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ்.
திருநெல்வேலி, பழையபேட்டை ராணி அண்ணா கலைக்கல்லூரியில் தொழில் முனைவோர் மேம்பாடு- புத்தாக்க நிறுவனம் சார்பில் மாணவ-மாணவிகளுக்கான தொழில்முனைவோர் கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு ஆட்சியர் தலைமை வகித்துப் பேசியதாவது: ஒரு தேசத்தின் வளர்ச்சி என்பது அந்நாட்டின் தொழில் வளர்ச்சியை பொருத்து அமைகிறது. தமிழக அரசு தொழில் துறை முன்னேற்றத்திற்காக பல்வேறு சலுகைகள், மானியங்களை அறிவித்து, அயல் நாட்டு முதலீடுகளை பெருமளவில் கவர்ந்துள்ளதுடன், தொழில் வளர்ச்சிக்கான திட்டங்களை செயல்படுத்துவதில் மற்ற மாநிலங்களைவிட முதன்மையாகத் திகழ்கிறது. தொழில் தொடங்கிட தேவையான ஆவணங்கள், சான்றிதழ்களை அரசு விரைந்து வழங்கி வருகிறது. இத்தகைய அறிய வாய்ப்பை ஒவ்வொரு மாணவ- மாணவியரும் பயன்படுத்தி, உலக அளவில் தொழில்துறையில் தமிழகம் சிறந்து விளங்கிட தொழில்முனைவோராக உருவாக வேண்டும் என்றார்.
இதில், ராணி அண்ணா கல்லூரி முதல்வர் சி.வி.மைதிலி, தொழில்முனைவோர் ஒருங்கிணைப்பாளர் மைதிலி, பயிற்சி ஒருங்கிணைப்பாளர் சிவநேசன், கருத்துரையாளர் கலைவாணன் உள்பட பலர் பங்கேற்றனர்.