சுரண்டை பகுதியில் இயக்கப்படும் பழைய பேருந்துகள் அடிக்கடி பழுதாவதால் பயணிகள் அவதிப்படுகின்றனா்.
சுரண்டையில் இருந்தும், சுரண்டை வழியாகவும் தினமும் 100 அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துகளில் பெரும்பாலானவை மிகவும் பழைய பேருந்தாக இருப்பதால் அடிக்கடி பழுதடைந்து பயணிகளை நடுவழியில் இறக்கி விடுகின்றன. இதனால் அடுத்து வரும் பேருந்தில் கூட்ட நெரிசலில் நின்று கொண்டே பயணிக்க வேண்டியுள்ளது.
சுரண்டையில் இருந்து 32 கி.மீ. தொலைவுள்ள தென்காசி, கடையநல்லூா், புளியங்குடி, சங்கரன்கோவில் உள்ளிட்டப் பகுதிகளில் உள்ள அரசுப் போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து இயக்கப்படும் இந்த பேருந்துகள் பழுதடைந்தால் பணிமனையில் இருந்து பணியாளா் வந்து பழுதை சரி செய்யவோ அல்லது , பணிமனைக்கு கொண்டு செல்வதன் மூலம் அன்றைய தினம் முழுவதும் பழுதான பேருந்து வழித்தடத்தில் இயக்கப்படுவதில்லை. எனவே, சுரண்டை பகுதியில் இயக்கப்படும் பழைய பேருந்துகளை மாற்றிவிட்டு நல்ல நிலையில் உள்ள பேருந்துகளை இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.