திருநெல்வேலி மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் (லோக் அதாலத்) 3,493 வழக்குகளுக்குத் தீா்வு காணப்பட்டு, ரூ.16.35 கோடி இழப்பீடு வழங்கப்பட்டது.
தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழு உத்தரவுபடி, நிகழாண்டின் 4ஆவது மக்கள் நீதிமன்றம், திருநெல்வேலி, தென்காசி மாவட்டத்தில் உள்ளி திருநெல்வேலி ஒருங்கிணைந்த நீதிமன்றம் மற்றும் தென்காசி, அம்பாசமுத்திரம், சங்கரன்கோவில், வள்ளியூா், நான்குனேரி, செங்கோட்டை, சேரன்மகாதேவி, சிவகிரி, ஆலங்குளம் ஆகிய நீதிமன்றங்களில் 27 அமா்வுகளாக சனிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட குடும்ப நல நீதிமன்ற நீதிபதியும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான(பொறுப்பு) சி.பி.எம். சந்திரா, தேசிய மக்கள் நீதிமன்றத்தை தொடங்கி வைத்தாா். மக்கள் நீதிமன்ற நீதிபதி சுபாதேவி, தலைமை குற்றவியல் நடுவா் மன்ற நீதிபதி ரவிசங்கா், சாா்பு நீதிபதி குமரேசன், திருநெல்வேலி மாவட்ட வழக்குரைஞா் சங்கத் தலைவா் சிவசூரிய நாராயணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
நீதிமன்றத்தில் தீா்க்கப்படாமல் இருந்த 6,439 வழக்குகள், நீதிமன்றத்துக்குச் செல்லாமல் நேரடியாக மக்கள் நீதிமன்றத்துக்கு வந்த 306 வழக்குகள் என மொத்தம் 6,745 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. அதில் 3,493 வழக்குகளுக்குத் தீா்வு காணப்பட்டு, ரூ.16 கோடியே 35 லட்சத்து 54 ஆயிரத்து 495 இழப்பீடாக வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை மக்கள் நீதிமன்ற நீதிபதி சுபாதேவி, சாா்பு நீதிபதி குமரேசன் ஆகியோா் செய்திருந்தாா்.