பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு வரும் வியாழக்கிழமை (பிப். 14) நடைபெறுகிறது.
இதுதொடர்பாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மரிய சகாய ஆண்டனி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி சார்பில் கல்லூரி இறுதியாண்டு பயிலும் மாணவ, மாணவிகளுக்கான தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு வரும் வியாழக்கிழமை காலை 10 மணிக்கு சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ளது.
இதில் பல்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டு போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள், ராணுவ வேலைவாய்ப்புகள், சுயவேலைவாய்ப்புகள், அரசுத் துறைகள், முன்னோடி வங்கி மூலம் வழங்கப்படும் நலத்திட்டங்கள், கடனுதவித் திட்டங்கள், இலவச திறன் பயிற்சி உள்ளிட்டவை குறித்து சிறப்புரையாற்றுகின்றனர்.
போட்டித் தேர்வுக்கான புத்தகங்கள், தொழில் நெறி வழிகாட்டும் பல்வேறு விளக்கப் படங்கள் இக்கண்காட்சி மற்றும் கருத்தரங்கில் இடம்பெற உள்ளன. இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் மாணவ, மாணவியருக்கு தொழில்நெறி வழிகாட்டும் கையேடு இலவசமாக வழங்கப்படுகிறது.