சங்கரன்கோவில் அருகே கிணற்றில் தவறி விழுந்த முதியவரை தீயணைப்புப்படை வீரர்கள் புதன்கிழமை உயிருடன் மீட்டனர்.
சங்கரன்கோவில் அருகே வீரசிகாமணியைச் சேர்ந்தவர் அப்துல்ரஹ்மான் (80). இவர், புதன்கிழமை காலையில் கீழவீரசிகாமணிக்கு நடந்து சென்றுகொண்டிருந்தாராம். அப்போது, அங்குள்ள கிணற்றில் எதிர்பாராத விதமாக தவறி விழுந்து விட்டாராம். 100 அடி ஆழம் கொண்ட அந்த கிணற்றில் 4 அடி அளவுக்கு தண்ணீர் இருந்ததால் அப்துல்ரஹ்மான் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினார். அவரது அலறல் சப்தம் கேட்டு அருகில் வயலில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் அவரை மீட்க முயற்சி எடுத்தனர். சங்கரன்கோவில் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அலுவலர் பார்வதிநாதன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் வந்து, கிணற்றில் தத்தளித்துக் கொண்டிருந்த அப்துல்ரஹ்மானை கயிறு மூலம் பத்திரமாக மீட்டனர்.