முனைஞ்சிப்பட்டியில் உள்ள ஆசிரியர் பயிற்சி நிறுவன மாணவர்களின் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் 7 நாள்கள் நடைபெற்றது.
இம்முகாமுக்கு, பயிற்சி நிறுவன முதல்வர் பி.கோல்டா கிரேனா ராஜாத்தி தலைமை வகித்தார். திட்ட அலுவலர் எம்.ஞானசௌந்தரி வரவேற்றார். ஆலங்குளம் வழக்குரைஞர் எம்.வைத்திலிங்கம் சட்டம் மற்றும் மனித உரிமைகள் குறித்துப் பேசினார். நான்குனேரி தீயணைப்பு நிலைய அலுவலர் ஆர்.செல்வசேகரன் தீ விபத்தை தடுப்பதற்கான செய்முறை விளக்கம் அளித்தார்.
தூய சவேரியார் கல்லூரி இணை பேராசிரியர் ஜே.அமலநாதன், திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக உடற்கல்வித்துறை உதவி பேராசிரியர் எஸ்.சேது உள்பட பலர் பேசினர்.
முகாமில், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் முனைஞ்சிப்பட்டி பேருந்து நிறுத்தம், தங்கும் விடுதி ஆகியவற்றில் தூய்மைப் பணி, ரத்த தான விழிப்புணர்வுப் பேரணி, தேசிய நெடுஞ்சாலையிலுள்ள பள்ளங்களை நிரப்புதல் போன்ற பணிகளில் ஈடுபட்டனர். மாணவர்கள் பங்கேற்ற கலைநிகழ்சிகள் நடைபெற்றன. முகாம் நிறைவு விழாவில் மாணவர்களுக்கு பதக்கம், சான்றிதழ் வழங்கப்பட்டன.