கல்லிடைக்குறிச்சி அருகே விளை நிலங்களில் யானை புகுந்து அட்டகாசம் செய்ததில் நெற்பயிர்கள் சேதமடைந்தன.
கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள பொட்டல் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (55). இவர், மணிமுத்தாறு பிரதான கால்வாய் பாசனத்தில் சீரான்குளம் பேவிளையிலுள்ள நிலத்தில் நெல் பயிரிட்டுள்ளார். மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள இப்பகுதியில் வியாழக்கிழமை இரவு புகுந்த ஒற்றை யானை வயலில் அட்டகாசம் செய்ததில் நெற்பயிர் சேதமடைந்து விவசாயிக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. தகவலறிந்த அம்பாசமுத்திரம் வனச்சரகர் கார்த்திகேயன் தலைமையில் வனப்பணியாளர்கள் மலையடிவாரத்தில் நடமாடி வரும் யானையை காட்டுக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து அப்பகுதியில் வனத்துறையினர் முகாமிட்டுள்ளனர்.
யானைகள் மீண்டும் ஊருக்குள் வராத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். யானை அட்டகாசம் குறித்து பொட்டல், மலையான்குளம் பகுதி விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.