திருநெல்வேலி நகரத்தில் உள்ள கல்லணை மாநகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளியை கோடீஸ்வரன் நகர் பகுதி மக்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனர்.
திருநெல்வேலி நகரத்தில் உள்ள கல்லணை மாநகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் கோடீஸ்வரன்நகரைச் சேர்ந்த ஒரு மாணவி 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர், வெள்ளிக்கிழமை மாலையில் பள்ளி முடிந்தபின்பு வெளியேற முயன்றபோது ஆசிரியர் ஒருவர் அடித்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து அறிந்த மாணவியின் பெற்றோர் மற்றும் கோடீஸ்வரன் நகர் பகுதி மக்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.
தகவலறிந்ததும் திருநெல்வேலி நகரம் காவல் உதவி ஆணையர் சதீஷ்குமார், காவல் ஆய்வாளர் வேல்கனி மற்றும் போலீஸார் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து பள்ளித் தலைமை ஆசிரியர் நாச்சியார் (எ) ஆனந்த பைரவியிடமும், திருநெல்வேலி நகரம் காவல் நிலையத்திலும் பொதுமக்கள் மனு அளித்தனர்.