பாளையங்கோட்டை போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆட்சியர் அலுவலகத்தில் பெண் வெள்ளிக்கிழமை மனு அளித்தார்.
பாளையங்கோட்டை கோட்டூர் சாலையைச் சேர்ந்தவர் சுப்புமாரி. பாளையங்கோட்டை தினசரி சந்தை பகுதியில் சாலையோரத்தில் பூக்கடை நடத்தி வருகிறார்.
பொங்கல் பண்டிகையையொட்டி மஞ்சள் குலைகளை விற்பனைக்காக வைத்திருந்தாராம். அப்போது அங்கு வந்த பாளையங்கோட்டை போலீஸார், போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மஞ்சள் குலைகளை அப்புறப்படுத்துமாறு கூறினராம். அதற்கு, தனது தாய் வந்தவுடன் அகற்றுவதாக சுப்புமாரி கூறினாராம். இதை ஏற்க மறுத்த போலீஸார் அவரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக சுப்புமாரி திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை அளித்த மனு:
பாளையங்கோட்டை போலீஸார் என்னை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, கம்பால் தாக்கினர். இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டிருந்தது.