முற்பட்ட வகுப்பினருக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை நிறைவேற்றிய மத்திய அரசுக்கு தமிழ்நாடு சைவ வேளாளர் சங்கம் பாராட்டு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு சைவ வேளாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் புளியரை ராஜா வெளியிட்ட அறிக்கை: முற்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்கக் கோரி தமிழ்நாடு சைவ வேளாளர் சங்கம் கடந்த 30 ஆண்டுகளாக மத்திய-மாநில அரசுகளிடம் வலியுறுத்தி வந்தது.
இந்நிலையில் நலிவடைந்த முற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை பாஜக தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்திருப்பதை வரவேற்கிறோம். பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுத்த பிரதமர் நரேந்திர மோடிக்கு பாராட்டு தெரிவித்துக் கொள்கிறோம். தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் இதற்கு ஆதரவு தெரிவிப்பதோடு, மாநில அரசும் முறையாக இடஒதுக்கீட்டை அமல்படுத்த விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.