பிரம்மாகுமாரிகள் அமைப்பின் சார்பில் தெய்வங்களின் தெய்வம் (காட் ஆப் காட்ஸ்) என்ற திரைப்படம் வெளியிடும் நிகழ்ச்சி திருநெல்வேலியில் அண்மையில் நடைபெற்றது.
பிரஜாபிதா பிரம்மா குமாரிகள் ஐஸ்வர்ய விஸ்வ வித்யாலயா அமைப்பைச் சேர்ந்த வெங்கடேஷ் கோபால் எழுதி இயக்கிய இந்த திரைப்படம் வெளியிடும் நிகழ்ச்சிக்கு, அமைப்பின் திருநெல்வேலி பொறுப்பாளர் பி.கே.புவனேஸ்வரி தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் கெடன் சிவபாலன் வரவேற்றார்.
பன்னாட்டு மதச்சுதந்திர கூட்டமைப்புத் தலைவர் வழக்குரைஞர் பி.டி.சிதம்பரம், செயலர் கவிஞர் கோ.கணபதிசுப்பிரமணியன், துணைத் தலைவர் அ.மரியசூசை உள்ளிட்டோர் குத்துவிளக்கேற்றினர். திரைப்படம் குறித்து நிர்வாகிகள் கூறுகையில், உலக ஆன்மிக வரலாறு, மதநல்லிணக்கம், மனிதநேயம் ஆகியவற்றை மையப்படுத்தி இத் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. யோகா மற்றும் தியானப் பயிற்சிகளின் நன்மைகளை விளக்கும் வகையிலும், அனைத்து வயதினரும் பார்த்து விளக்கமறியும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது என்றனர்.