அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல்காந்தி ராஜிநாமா செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருநெல்வேலியில் காங்கிரஸ் கட்சியினர் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியைத் தழுவியதைத் தொடர்ந்து அகில இந்திய தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக ராகுல்காந்தி தெரிவித்தார். இந்நிலையில் அவர் தனது ராஜிநாமா கடிதத்தை கட்சி மேலிடத்திற்கு அனுப்பியதாக புதன்கிழமை தகவல் பரவியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருநெல்வேலி மாநகர் மாவட்ட காங்கிரஸ் அலுவலகம் முன்பு கட்சித் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநகர் மாவட்டத் தலைவர் கே.சங்கரபாண்டியன் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச்செயலர் சொக்கலிங்ககுமார், மண்டல தலைவர்கள் மாரியப்பன், ஐயப்பன், ரகுபதிராஜன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.