தென்காசி அருகே மஞ்சள் ஆலையில் தீ விபத்து: 4 பேர் பலத்த காயம்

திருநெல்வேலி மாவட்டம், தென்காசி அருகே இலஞ்சி-வல்லம் சாலையில் உள்ள மஞ்சள் ஆலையில் வெள்ளிக்கிழமை

திருநெல்வேலி மாவட்டம், தென்காசி அருகே இலஞ்சி-வல்லம் சாலையில் உள்ள மஞ்சள் ஆலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை நேரிட்ட தீ விபத்தில் 4 பேர் பலத்த காயமடைந்தனர்.
செங்கோட்டை பிரானூர்பார்டர் பகுதியைச் சேர்ந்தவர் சிவ்கன் கே. பட்டேல் (60). இவருக்கு சொந்தமான மஞ்சள் ஆலை இலஞ்சி-வல்லம் சாலையில் உள்ளது. இந்த ஆலையில், மஞ்சள் தூள் மற்றும் சாறு உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்நிலையில், ஆலையில் செங்கோட்டை ரயில்வே சாலை பகுதியைச் சேர்ந்த ஆபரேட்டர் து. மணிவண்ணன் (32), காசிமேஜர்புரம் பகுதியைச் சேர்ந்த காவலாளி செண்பகம் (84), செங்கோட்டை பிரானூர்பார்டர் அம்மன்கோயில் தெருவைச் சேர்ந்த உதவியாளர்கள் மு. கண்ணன் (21), வல்லம் தெற்குத் தெருவைச் சேர்ந்த மு. அமல்ராஜ் (43) ஆகியோர் வெள்ளிக்கிழமை அதிகாலை வழக்கமான பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, கொதிகலன்களில் தீப்பிடித்துள்ளது. கிடங்கில் இருந்த வேதிப்பொருள்கள் மற்றும் மஞ்சள் போன்றவற்றிலும் பரவிய இந்தத் தீயால், ஆலை முழுவதும் பற்றி எரியத் தொடங்கியது. 
தகவலின்பேரில், தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர் ஆகிய பகுதிகளிலிருந்து தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் அங்குவந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில், மணிவண்ணன், செண்பகம், கண்ணன், அமல்ராஜ் ஆகிய 4 பேரும் காயமடைந்தனர். அவர்களை மீட்ட தீயணைப்புப் படையினர், 4 பேரையும் தென்காசி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இதில், பலத்த காயமடைந்த கண்ணன், தென்காசி அரசு மருத்துவமனையில் முதலுதவிக்குப் பிறகு, தீவிரச் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து குற்றாலம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com