மருத்துவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் உண்ணாவிரதம்

மருத்துவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என  ஜனநாயக தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க


மருத்துவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என  ஜனநாயக தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க மாநில தலைவர் பி.பாலகிருஷ்ணன் கூறினார்.
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சனிக்கிழமை நடைபெற்ற  சங்க செயற்குழு குழு கூட்டத்தில் கலந்து கொண்ட அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது:
அரசு மருத்துவர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை பதவி உயர்வும், சம்பள உயர்வும் வழங்க  வேண்டும். மருத்துமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கையை வைத்தே மருத்துவர்களை நியமிக்க வேண்டும்.
மருத்துவப் படிப்பு முடித்த மாணவர்களுக்கு கலந்தாய்வு நடத்தி பணி வழங்கும் முறை கடந்த ஆண்டு வரை நடைமுறையில் இருந்தது.  நிகழாண்டு முதல் இம்முறை மாற்றப்பட்டு கலந்தாய்வு நடத்தாமல் பணி வழங்கப்பட்டுள்ளது. மீண்டும் முன்புபோன்று கலந்தாய்வு நடத்தி பணி வழங்க வேண்டும்.
மருத்துவப் படிப்பு முடித்துவிட்டு கிராமப்புறங்களில் பணிபுரியும் அரசு மருத்துவர்களுக்கு உயர்நிலை பட்ட மேற்படிப்பு, உயர்சிறப்பு பட்ட மேற்படிப்பு ஆகிய படிப்புகளுக்கான இடஒதுக்கீடு கடந்த ஆண்டு வரை 50 சதவீதம் இருந்தது. அந்த ஒதுக்கீடு நிகழாண்டு முதல் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதை திரும்பவும் அமல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆந்திரத்தில் உள்ளது போன்று பழைய ஓய்வூதிய கொள்கையை திரும்ப அமல்படுத்த வேண்டும். மருத்துவர்களுக்கு உரிய பணி பாதுகாப்பு வழங்க வேண்டும்.
இந்தக் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாத பட்சத்தில், இம்மாதம் 15, 16 ஆகிய தேதிகளில் சென்னையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவோம். அப்போதும் அரசு செவிசாய்க்கவில்லையென்றால் தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் 18 ஆம் தேதி காலையில் 2 மணிநேரம் வெளிநோயாளிகள் சிகிச்சையை புறக்கணித்து  அவசர சிகிச்சை நோயாளிகளுக்குப் பாதிப்பு ஏற்படாமல் போராடுவோம் என்றார்.
முன்னதாக, திருநெல்வேலி மாவட்ட ஜனநாயக தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் சார்பில் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கூட்டரங்கில் மாநில செயற்குழு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. மாநிலத் தலைவர் பி.பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார்.  மாநில ஒருங்கிணைப்பாளர் அருள்பிரகாஷ், மாநிலச் செயலர் டி.செந்தில்குமார், மாநில பொருளாளர் கேசவன் ஆகியோர் பேசினர்.
மாவட்டத் தலைவர் வி.ஸ்ரீராமகிருஷ்ணன் வரவேற்றார். மாவட்ட செயலர் செல்வமுருகன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com