தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) சட்டத் திருத்தம் வரவேற்கத்தக்கது என்றார் இந்து முன்னணியின் மாநில துணைத் தலைவர் வி.பி.ஜெயக்குமார்.
திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் அவர் ஞாயிற்றுக்கிழமை கூறியது: மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள என்.ஐ.ஏ. சட்டத் திருத்தம் வரவேற்கத்தக்கதாகும். தமிழகத்தில் அதிமுக, திமுக போன்ற பிரதான கட்சிகள் அதனை ஆதரித்துள்ளது பாராட்டுக்குரியது. திமுகவின் கூட்டணிக் கட்சிகளான முஸ்லிம் லீக், கம்யூனிஸ்டுகள் இந்த சட்டத் திருத்தத்தை எதிர்த்துள்ளனர். இதன் மூலம் கம்யூனிஸ்ட் கட்சியினர் தங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு துரோகம் செய்வதைப் போல் உள்ளது.
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக உள்ளதாக சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார். ஆனால், தமிழகத்தில் பதுங்கிய பயங்கரவாதிகளை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள்தான் கைது செய்துள்ளனர். இந்தச் சூழலில் தமிழகத்தின் உளவுப் பிரிவுகளைப் பலப்படுத்தி உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திக் கொடுத்து பயங்கரவாதிகள் புகாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.
பேட்டியின்போது மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் கா.குற்றாலநாதன், மாவட்டச் செயலர்கள் டி.சிவா, எம்.சுடலை உள்ளிட்டோர் உடனிருந்தனர்.