நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பதவியேற்பு
By DIN | Published On : 14th June 2019 07:07 AM | Last Updated : 14th June 2019 07:07 AM | அ+அ அ- |

திருநெல்வேலி மாவட்ட புதிய முதன்மைக் கல்வி அலுவலர் கணேஷ் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார் .
இம்மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராகப் பணியாற்றிய பாலா, கடந்த மாதம் 31ஆம் தேதி ஓய்வுபெற்றார். இதையடுத்து, தேனி கல்வி மாவட்ட அலுவலராக இருந்த கணேஷ் திருநெல்வேலி மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இவர் திருநெல்வேலி முதன்மைக் கல்வி அலுவலகத்தில் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.
அவர் கூறியது: தென்னகத்தின் ஆக்ஸ்போர்டு எனப்படும் திருநெல்வேலி மாவட்டத்தை கல்வி வளர்ச்சியில் அடுத்தகட்டத்துக்கு உயர்த்தத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அரசுப் பள்ளிகள் வளரத் தேவையான முயற்சிகள் செய்யப்படும். கல்வித் துறையில் அரசு வழங்கும் திட்டங்கள் மாணவர்களுக்கு உரிய நேரத்தில் சென்றடைய வழிவகை செய்யப்படும் என்றார்.