ஆலங்குளம் அருகே விபத்தில் காயமடைந்தவர் உயிரிழந்தார்.
ஆலங்குளம் அருகேயுள்ள கரும்புளியூத்து மேலத் தெருவைச் சேர்ந்த சாமிக்கண்ணு மகன் அந்தோணி கோவில் பாக்கியம் (41). இவர் ஆலங்குளத்தில் உள்ள அரசு நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் சுமை தூக்கும் தொழிலாளியாக இருந்து வந்த இவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆலங்குளம் அருகே நல்லூரில் உள்ள கடைக்கு மனைவி மேகலாவுடன் பைக்கில் சென்றுவிட்டு ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தாராம். அப்போது, தனியார் நூற்பாலை அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த லாரி பைக் மீது மோதியதில் தம்பதி பலத்த காயமடைந்தனர்.
இதையடுத்து இருவரும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அந்தோணி கோவில் பாக்கியம் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து ஆலங்குளம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.