திருநெல்வேலி: எதிர்க்கட்சிகள் போராட்டத்தைக் கைவிட்டு தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு கூற வேண்டும் என தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் (தமமுக) நிறுவனர்- தலைவர் ஜான்பாண்டியன் கேட்டுக்கொண்டார்.
திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை அவர் கூறியது: வர இருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் கட்சியின் நிலைப்பாடு குறித்து செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கவுள்ளோம்.
தமிழகத்தில் திமுக ஆட்சியில்தான் பல குளங்கள் குடியிருப்புகளாக மாறின. இவ்வாறு நீர் நிலைகள் அழிக்கப்பட்டால் மழை எப்படி பெய்யும்? போராட்டம் நடத்தி மக்களை ஏமாற்ற முடியாது. ஆகவே எதிர்க்கட்சிகள் போராட்டத்தை கைவிட்டு தண்ணீர் பற்றாக்குறையை போக்கும் வழிகள் குறித்து கூறினால் அது மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைவதை தடுக்க அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபட்டு போராட வேண்டும்.
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த சூழலுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், தற்போது ஜாதிய படுகொலைகள் முற்றிலும் குறைந்துள்ளன என்றார்.