தமிழக -கேரள எல்லையான கோட்டைவாசல் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு தடுப்பு சுவரில் கேரள அரசுப் பேருந்து மோதியதில் அதில் பயணம் செய்த 25 பேர் காயமடைந்தனர்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை மாலை 4.30 மணியளவில் 35 பயணிகளுடன் புறப்பட்டு, நெல்லை மாவட்டம் தென்காசிக்கு கேரள அரசுப் பேருந்து வந்துகொண்டிருந்தது. தமிழக - கேரள எல்லையான நெல்லை மாவட்டம் புளியரை கோட்டைவாசல் அருகே இரவு சுமார் 9.30 மணியளவில் ஓட்டுநர் ஷாஜகானின் கட்டுப்பாட்டை இழந்தது. உடனடியாக சுதாரித்துக்கொண்ட ஓட்டுநர், சாலை ஓர தடுப்பு சுவரில் மோதி பேருந்தை நிறுத்தியுள்ளார். இதில் பேருந்தில் பயணம் செய்த 25 பேர் காயமடைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த செங்கோட்டை காவல் ஆய்வாளர் சுரேஷ்குமார் , புளியரை எஸ் .ஐ. ஷியாம் மற்றும் போலீஸார் அந்தப் பகுதிக்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு, பலத்த காயமடைந்த 5 பேர் தென்காசி மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து குறித்து புளியரை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.