பாவூர்சத்திரத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பாவூர்சத்திரம் பேருந்து நிலைய பகுதி, கடையம் சாலை, சுரண்டை சாலையில் வணிக நிறுவனங்கள், கடைகள் அதிகமாக உள்ளன. இப்பகுதியில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக இருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் விபத்துகளும் அடிக்கடி நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாலையை அகலப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி, நெடுஞ்சாலைத் துறை சார்பில் சில தினங்களுக்கு முன்பு ஆக்கிரமிப்புகளை அளவிட்டு உடனடியாக அகற்றும்படி சம்பந்தப்பட்ட கடைக்காரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை தென்காசி உதவி கோட்டப் பொறியாளர் பிரபாகர் பிரின்ஸ், உதவிப் பொறியாளர் அறிவிழில் ஆகியோர் மேற்பார்வையில், போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது. திருநெல்வேலி பிரதான சாலை, கடையம் சாலை, சுரண்டை சாலையில் கடைகளுக்கு முன் உள்ள ஆக்கிரமிப்புகள் ஜே.சி.பி. இயந்திரம் மூலம் அகற்றப்பட்டன. மீண்டும் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.