திருநெல்வேலி அருகே பைக் மீது பேருந்து மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழந்தார்.
ஆலங்குளம் அருகே உள்ள கீழ குத்தப்பாஞ்சானைச் சேர்ந்த பால்ராஜ் மகன் முருகேசன் (21). இவர் பாளையங்கோட்டையை அடுத்த ரெட்டியார்பட்டியில் சலூன் கடையில் வேலைபார்த்து வந்தார்.
இந்நிலையில் இவர், செவ்வாய்க்கிழமை பைக்கில் சொந்த ஊருக்கு சென்றுள்ளார். காந்திநகர் ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி அருகே சென்றுகொண்டிருந்தபோது, எதிரே சுரண்டையில் இருந்து திருநெல்வேலி நோக்கி வந்த அரசுப் பேருந்து மோதியதில் பலத்த காயமடைந்தார். இதையடுத்து திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து திருநெல்வேலி மாநகர போக்குவரத்து புலனாய்வு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.