தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக திருநெல்வேலிக்கு துணை ராணுவப் படையின் ஒரு கம்பெனி வீரர்கள் சனிக்கிழமை வந்து சேர்ந்தனர். அவர்களுக்கு மாநகர காவல் ஆணையர் நீ.பாஸ்கரன் வரவேற்பு அளித்தார்.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 18 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இம் மாவட்டத்தில் திருநெல்வேலி, தென்காசி மக்களவைத் தொகுதிகளுக்கு நடைபெற உள்ள தேர்தலையொட்டி பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
மொத்தமுள்ள 2,979 வாக்குச்சாவடிகளில் பதற்றமானவை, மிகவும் பதற்றமானவை என பிரிக்கப்பட்டு அப் பகுதிகளில் பாதுகாப்பு, ரோந்து, வாகன தணிக்கையை போலீஸார் அதிகரித்துள்ளனர். மாவட்டம் முழுவதும் உள்ள சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மக்களவைத் தேர்தலுக்கான பாதுகாப்பு வீரர்கள் விரைவில் வந்து சேர்வார்கள் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.
அதன்படி இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 82 வீரர்கள் உதவி கமாண்டர் அஜய்ஆனந்த் தலைமையில் திருநெல்வேலிக்கு வந்தனர். பாதுகாப்புப்படை வீரர்களை, திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் நீ.பாஸ்கரன் வரவேற்றார்.
இம் மாவட்டத்தில் தேர்தல் பணிக்கு காவல் துறையினருடன் இணைந்து பணியாற்றவும், நேர்மையாகவும், அமைதியாகவும் தேர்தலை நடத்தி முடிக்க ஒத்துழைப்பு அளிக்கக் கேட்டுக்கொண்டார். வீரர்களுக்கு தேவையான உணவு, இருப்பிடம், மருத்துவம் உள்ளிட்ட தேவையான அனைத்து வசதிகளும் முழுமையாக செய்து கொடுக்கப்படும் என்றார்.
தொடர்ந்து மாநகர காவல் துறையினருடன் இணைந்து மாநகரப் பகுதியில் சனிக்கிழமை இரவு முழுவதும் துணை ராணுவப் படையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.