திருநெல்வேலி மாவட்டம், குற்றாலத்தில் தமிழக மற்றும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
இக் கூட்டத்தில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ், கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்ட ஆட்சியர் பி.பி.நூகு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெய்தேவ், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண்சக்திகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், கோட்டாட்சியர் சௌந்திரராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் கூறியதாவது:
இரண்டு மாவட்டங்களுக்கு இடையில் பொதுவான பிரச்னைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. தமிழகத்தில் முதலிலும் அதைத் தொடர்ந்து கேரளத்திலும் தேர்தல் நடைபெறுகிறது.
எனவே வாக்காளர்கள் முறைகேடாக வாக்குப் பதிவு செய்வதை தவிர்ப்பது உள்ளிட்ட பொருள்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது என்றார் அவர்.