புளியங்குடி அருகே குடும்ப பிரச்னையில் மனைவியை வெட்டிக் கொன்ற கணவர் கைது செய்யப்பட்டார்.
புளியங்குடி அருகே நெல்கட்டும்செவல் மேலத் தெருவைச் சேர்ந்த சுப்பையா மகன் சமுத்திரபாண்டி (40). வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி வெள்ளத்துரைச்சி (33). சமுத்திரபாண்டி விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார். செவ்வாய்க்கிழமை காலையில் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சமுத்திரபாண்டி மனைவியை அரிவாளால் வெட்டினாராம். தடுக்கச் சென்ற அவரது மகள் சிவரஞ்சனியையும் (16) வெட்டியுள்ளார். இதில் வெள்ளத்துரைச்சி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சிவரஞ்சனி திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தகவலறிந்த புளியங்குடி போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று, வெள்ளத்துரைச்சியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப் பதிந்து சமுத்திரபாண்டியை கைது செய்தனர்.