மாஞ்சோலை செல்லும் மலைச் சாலையை முறையாக சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மணிமுத்தாறிலிருந்து மாஞ்சோலை செல்லும் மலைச்சாலை பல ஆண்டுகளாகப் பராமரிக்கப்படாமல் இருந்ததால் பலத்த சேதமடைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்றதாக இருந்து வந்தது.
இதையடுத்து மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்களும், சுற்றுலாப் பயணிகளும் மாஞ்சோலை செல்ல மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வந்தனர்.
இதையடுத்து வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சாலையை சீரமைக்க சமூக ஆர்வலர்கள், பயணிகள் தோட்டத்தொழிலாளர்கள் உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து சுமார் ரூ. 1.70 கோடி மதிப்பில் மணிமுத்தாறு வனச்சோதனைச் சாவடியிலிருந்து தலையணை வரை சுமார் 7 கி.மீ. தொலைவு சாலையை புதுப்பிக்கும் பணி தொடங்கப்பட்டது. இதையடுத்து பழைய சாலையைக் கிளறிவிட்டு அதன் மேல் கருங்கல் மற்றும் கருங்கல் பொடி கலவையைப் போட்டு சாலையை சீரமைத்தனர்.
இந்நிலையில் கோதையாறு செல்லும் சாலை யை சீரமைப்பதற்காக தார் டின்களை ஏற்றிக் கொண்டு லாரிகள் சென்றன. இதனால் கருங்கல் கலவை பெயர்ந்துவிட்டது.
எனவே, வனச் சோதனைச் சாவடியிலிருந்து தலையணை வரை புதிய சாலை அமைக்கும் பணி முழுமையாக நிறைவடைந்து சாலை நன்கு உறுதியானபின் லாரிகளில் தார் உள்ளிட்டவற்றைக் கொண்டு செல்ல வேண்டும். இல்லையென்றால் புதிதாக அமைக்கப்படும் சாலை விரைவில் சேதமடையும் நிலை ஏற்படும் என்று சமூக ஆர்வலர்களும் தோட்டத் தொழிலாளர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.