ராதாபுரம் அருகே ஆவுடையாள்புரம் ஸ்ரீ முத்தாரம்மன் கோயில் கொடை விழா நான்கு நாள்கள் நடைபெற்றது.
இதைமுன்னிட்டு திங்கள்கிழமை காலை 6 மணிக்கு கும்பாபிஷேகத்துடன் கொடைவிழா தொடங்கியது. தொடர்ந்து சுமங்கலி பூஜை, பிற்பகல் 3 மணிக்கு கடற்கரையில் அம்மனுக்கு ஆறாட்டு நடைபெற்றது.
இரண்டாம் நாளான செவ்வாய்க்கிழமை அம்மனுக்கு அலங்கார பூஜையும், மாலையில் அம்மன் தேர் பவனியும், இரவில் முளைப்பாரி ஊர்வலமும், இரவு 12 மணிக்கு நள்ளிரவு பூஜையும் நடைபெற்றது. மூன்றாம் நாளான புதன்கிழமை காலை 10 மணிக்கு மஞ்சள் பெட்டி ஊர்வலமும், அம்மன் மஞ்சள் நீராடல், வீதிஉலாவும், இரவு 8 மணிக்கு மாவிளக்கு ஊர்வலமும் நடைபெற்றது. நான்காம் நாளான வியாழக்கிழமை அதிகாலை அம்மனுக்கு படையல் பூஜையும், தொடர்ந்து கட்டேறும் பெருமாளுக்கு பொங்கலிடுதல் மற்றும் படையலிட்டு வழிபாடு நடைபெற்றது. ஏற்பாடுகளை விழாக் கமிட்டியினர் செய்து இருந்தனர்.