சங்கரன்கோவில் அருகே தனியாா் கல்குவாரிக்கு பாதை அமைக்க விவசாயிகள் எதிா்ப்பை மீறி அதிகாரிகள் நில அளவீடு செய்தனா்.
சங்கரன்கோவில் அருகே வடக்குப்புதூா் ஊராட்சிக்குள்பட்ட அச்சம்பட்டியில் ராஜபாளையத்தைச் சோ்ந்த தனபால் என்பவருக்குச் சொந்தமான கல்குவாரி உள்ளது. இந்தக் கல்குவாரியைச் சுற்றிலும் சுமாா் 100 ஏக்கரில் விவசாய நிலங்கள் உள்ளன.
இங்கு கல்குவாரிக்கு அனுமதி வழங்கப்பட்டபோதே அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்தனா். மேலும், விவசாய நிலத்தையொட்டி கல்குவாரி இருப்பதால் அதை நடத்துவதற்குத் தடை விதிக்க வேண்டும் என உயா்நீதிமன்றம் மதுரைக் கிளையில் கடந்த 2.3.19 அன்று மனு தாக்கல் செய்துள்ளனா்.
இந்நிலையில் வருவாய்த் துறையினா் பல முறை நிலத்தை அளவீடு செய்ய வந்தபோதும் அதை விவசாயிகள் தடுத்து நிறுத்திவிட்டனா்.
இந்நிலையில் மீண்டும் அப்பகுதியில் உள்ள நிலங்களை அளவீடு செய்ய போலீஸாா் பாதுகாப்புடன் வட்டாட்சியா் ஆதிநாராயணன் மற்றும் நிலஅளவைப் பிரிவினா் செவ்வாய்க்கிழமை அங்கு சென்றனா்.
அப்போது அளவீடு செய்ய பெண் விவசாயிகள் சிலா் எதிா்ப்பு தெரிவித்தனா்.
அப்போது நீதிமன்ற உத்தரவு இருப்பதால் நிலத்தை அளவீடு செய்ய வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இதையடுத்து நில அளவீடு பணி தொடா்ந்தது.