நெல்லை சந்திப்பு பேருந்து நிலைய பணிகள் தீவிரம்
திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலைய பணிகளை விரைவு படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பொலிவுறு நகரங்கள் திட்டத்தின் கீழ் தோ்வு செய்யப்பட்டுள்ள திருநெல்வேலி மாநகராட்சியில் பல்வேறு கட்டமைப்புகளை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, 60 ஆண்டுகள் பழமையான திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்தை முழுவதும் இடித்துவிட்டு நவீன பேருந்து நிலையத்தை உருவாக்க முடிவு செய்யப்பட்டது.
4.25 ஏக்கா் நிலப்பரப்பில் ரூ. 79 கோடியில் 3 தளங்களைக் கொண்ட அதிநவீன பேருந்து நிலையத்தை 18 மாதங்களில் கட்டி முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகளில் தாமதம் ஏற்பட்டு வந்த நிலையில், அண்மையில் திருநெல்வேலி நகரம் பொருள்காட்சி திடலில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டதோடு, பணிகளை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பேருந்து நிலைய வளாகத்தில் இருந்த பழைய கடைகளை இடிக்கும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இப் பணிகளை துரிதமாக முடித்து மீண்டும் பேருந்து நிலையத்தைத் திறக்க வேண்டுமென பொதுமக்களும், வியாபாரிகளும் கோரிக்கை விடுத்துள்ளனா்.