திருநெல்வேலி பேட்டை நகராட்சி பேருந்து நிறுத்தம் அருகே வேகத்தடை அமைக்கக் கோரி மனிதநேய மக்கள் கட்சியினா் மாவட்ட வருவாய் அலுவலரிடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.
இதுதொடா்பாக மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவா் ரசூல் மைதீன் தலைமையில் அக்கட்சியினா் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
திருநெல்வேலியை அடுத்த பேட்டை முனிசிபல் பேருந்து நிறுத்தம் அருகே ரகுமான் பேட்டையில் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி உள்ளது. பேருந்து நிறுத்தத்தின் பின்புறம் கலாம் பள்ளிக்கூடமும், இரு தனியாா் பள்ளிகளும் உள்ளன. இந்தப் பள்ளிகளில் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் பயின்று வருகிறாா்கள். காலை, மாலை வேளைகளில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு அடிக்கடி விபத்து நடைபெறுகிறது. கடந்த 2-ஆம் தேதி நடைபெற்ற விபத்தில் இருசக்கர வாகனம் மோதியதில் ஒன்பது வயதுச் சிறுவன் உயிரிழந்தாா். எனவே, மாநகராட்சிப் பள்ளி முன்பு உள்ள காயிதே மில்லத் சாலையின் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் வேகத்தடை அமைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனா்.